Thursday 1 August 2013

சாதிவெறி எங்களுக்கு இல்லை தமிழனின் வரலாற்றைச்சொல்ல வேறு வழியும் இல்லை ஆதலால் கூறுகிறோம் உலகத்தின் தொன்மையான தமிழன் வள்ளுவனென்று








திருவள்ளுவரின் பூர்வீகம் குமரிதான் என்பதற்கு ஆதாரம் உங்களுக்காக
=======================================================
"வள்ளுவர் கன்னியாகுமரி மண்ணின் மைந்தன்!" 

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கடலில் கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவர் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கே தவிர்க்க முடியாத அடையாளம்! 'தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அழகான கடற்கரைகளும் எழில் கொஞ்சும் பாறைகளும் இருக்கும்போது, எதற்காகக் கன்னியாகுமரியில் அவருக்குச் சிலைவைத்தார்கள்?’ வரலாற்றுப் பின்னணியோடு அதற்கான காரணங்களைச் சொல்கிறார் 

நாகர்கோவிலைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், டாக்டர் பத்மநாபன். இவர், குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

''தொல்காப்பியத்தில் 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’னு தமிழகத்தின் எல்லை பரப்பு சொல்லப்பட்டு இருக்கு. தொல்காப்பியத்தில் சொல்லப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்னு நான்கு வகை நிலங்களும் குமரி மாவட்டத்தில் இருக்குது. அதனால்தான் வள்ளுவர் திருக்குறளில் இந்த நான்கு நிலங்களுக்குமான பிரதான தொழில்களைப் பற்றியும், அதன் நுணுக்கங்களையும் அத்தனை சிறப்பா சொல்லி இருக்காரு.

அன்றைய காலங்களில் குமரி மாவட்டத்தில் குறிஞ்சி நிலத்தில் குறவர்களும், முல்லை நிலத்தில் வேட்டுவர்களும், மருத நிலத்தில் உழவர்களும், நெய்தல் நிலத்தில் மீனவர்களும் வாழ்ந்துஇருக்காங்க. திருவள்ளுவர் பிறந்த ஊரான (இப்போது மறுவி திருநயினார்குறிச்சி) திருநாயனார்குறிச்சியின் பக்கத்தில்தான் முட்டம் கடல் பகுதி இருக்கு. அதாவது முழுக்க முழுக்க நெய்தல் பூமி. அதன் எதிர்ப் பக்கத்தில் பெரிய குளம். நீர்ப் பாசனம் நிறைந்த பகுதி என்பதால் வெள்ளாமை செழிப்பாக நடைபெற்ற பூமி. அதாவது மருத நிலம். திருவள்ளுவர் நெய்தலும் மருதமும் இணையும் திருநாயனார்குறிச்சியில் பிறந்ததால்தான் இங்கு உள்ள தொழில்களை ரொம்பவும் மதிநுட்பத்துடன் குறள் வெண்பாக்களில் சொல்லி இருக்கார்.

திருநாயனார்குறிச்சியின் பக்கத்தில் கூவைமலைனு ஒரு மலை இருக்கு. பேச்சிப் பாறையை ஒட்டி உள்ள மலைப் பகுதிகளில் வசிக்கும் காணி என்னும் பழங்குடி மக்கள், வள்ளுவரை இன்னைக்கும் தெய்வமாக வணங்குறாங்க. பருவ மழை பொய்த்துவிட்டால் கூவைகாடு பகுதியில் வள்ளுவர் பெயரால் அமைந்து உள்ள வள்ளுவன் கல்பொற்றை மலைக்குப் போய், வள்ளுவருக்குப் படையல்வைத்து வணங்குவாங்க. இதுக்கு 'வள்ளுவன் கொடுதி’னு பேரு.

முன்னாடி குமரி மாவட்டம் 'வள்ளுவன் நாடு’, 'நாஞ்சில் நாடு’னு இரண்டு பகுதியா இருந்துச்சு. அதில் நாஞ்சில் நாட்டைப் பொருநன் என்ற வள்ளுவன் இனத்தைச் சேர்ந்த மன்னன் ஆட்சி செஞ்சிருக்காரு. வள்ளுவ நாட்டை, திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரே ஆட்சி செஞ்சாருனு சொல்லப்படுவது உண்டு. திருவள்ளுவர் அரசனாக இருந்து, பிற்பாடு துறவியாக மாறி இருக்கார். அதனால்தான் அரசியலைப் பற்றி எழுதும்போது வள்ளுவரால் மன்னருக்கே உரிய நுட்பமான திறன்களை அத்தனை அழகா சொல்ல முடிஞ்சிருக்கு. ஆனால், இடைக்காலத்தில் வள்ளுவர் நெய்தல் தொழில் செய்ததாகப் பதிவுசெய்துவிட்டார்கள். ஆனால், அவர் நெய்தல் நிலத்தில் வாழ்ந்தார் என்பது மட்டும்தான் உண்மை.

குமரி மாவட்டத்தில் உள்ள சராசரி பழக்கவழக்கங்கள், திருக்குறளில் அதிகமாக இடம்பெற்று உள்ளன. நாஞ்சில் நாட்டுக்கே உரிய உழவியல் செயல்முறையான பொடி விதைப்பு முறை திருக்குறளில் வருது. 'தொடிப் புழுதி’ எனத் தொடங்கும் குறளில் உள்ள பொருளைப் பார்த்தால், 'ஒரு பிடி மண் கால்பிடி ஆகும்படி உழவு காயவிட்டால், ஒரு பிடி உரம் கூட இல்லாமலேயே, பயிர் செழித்து வளரும்’ என்று பொருள்படும். நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் இந்தக் காய்ந்த மண்ணைப் 'புழுதி’ என்றே இன்றும் அழைக்கிறார்கள்.

வள்ளுவர் பல இடங்களில் 'உணக்கின்’ங்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்காரு. 'உணக்கின்’ என்ற சொல்லுக்கு காயவைத்தல்னு பொருள். இந்தச் சொல் இன்னைக்கும் குமரி மாவட்டப் பேச்சு வழக்கில் இருக்குது. அதே போல் இங்கு உள்ள முட்டம் பகுதியில் உள்ள மீனவர்கள், கடலில் மீன் பிடிக்கப் பயன்படுத்தும் தூண்டிலில் ஜரிகையை இணைப்பது வழக்கம். இதனை வள்ளுவர் 'தூண்டிற் பொன்’ என்ற குறளில் குறிப்பிட்டு இருக்கார். இந்த மீன் பிடி முறை தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது.

இது போன்ற தகவல்களைத் தொகுத்து 1995-ல் அரசு ஆவணங்களில் திருவள்ளுவர் குமரி மாவட்டத்தில் பிறந்ததாகப் பதிவு செஞ்சாங்க. இன்னைக்கும் 'திருவள்ளுவர் மதுரையில் பிறந்தார்’, 'மயிலாப்பூரில் பிறந்தார்’னு சொல்றாங்க. அவங்களால இந்த அளவுக்கு ஆதாரங்களைக் கொடுக்க முடியலை. வள்ளுவனுக்குச் சிலைவைக்க முடிவு செஞ்சதும் கன்னியாகுமரியைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணமும் இது தான்!' என்றார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், டாக்டர் பத்மநாபன். இவர், குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!

வள்ளுவ வரலாற்று ஆய்வு நடுவனுக்கான ஆராய்ச்சியில்
கிடைக்கும் தகவல்கள் உங்களது கவனத்திற்கு 


01.08.2013. 

வெ.ஜெ.ஹரிஹரசுதன்,

தலைவர், உவக வள்ளுவ குல இளைஞர் பேரவை,

ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சியாளர்

வள்ளுவ குல வரலாற்று ஆய்வு நடுவன்.




No comments:

Post a Comment