Wednesday 31 July 2013

காதல் என்றால் என்ன?


உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? 
அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். 

நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் 

பெருமை படைத்து இவ்வுலகு 

என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

காமத்துப்பாலின் ஒவ்வொரு குறலும் காதலை அணுவணுவாக உணர்ந்து எழுதப்பட்டது என்பதற்கு வள்ளுவன் வாசகியின் வாழ்கை ஒன்று போதுமே...

காதல் என்பது இருபாலருக்குண்டான இனக்கவர்ச்சியன்று அது வாழ்வியல். இரு உள்ளங்களின் சங்கமம் வாழ்தலில் மட்டுமே உணரக்கூடிய தத்துவம் எதிர்பார்ப்புகள் இல்லாத எந்த உறவுக்குமே அழிவென்பது இல்லை காதலின் வெளிப்பாடு அன்புமட்டுமே...
வள்ளுவம் எதை சொல்லாமல் விட்டுவிட்டது சொல்லுங்கள்...
மனிதன் எப்படிவாழவேண்டும் என்று எப்படிவாழக்கூடாது என்று அனைத்தையும் சொல்கிறது வள்ளுவத்தை பின்பற்றுங்கள் 

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், வாழ்கையை ஒரு விளையாட்டாக எண்ணுகின்றவர்கள் வள்ளுவத்தின் வழி வாழ்ந்துபாருங்கள் வாழ்கையை நேசிக்க கற்றுக்கொள்வீர்கள்

காதல் நேசிப்பதில் இல்லை வாழ்ந்துக்காட்டுவதில் இருக்கின்றது

வாழ்க வள்ளுவம்! வளர்க எம் குலம்!!

வள்ளுவத்தின் வழியில்
வெ.ஜெ.ஹரிஹரசுதன் வள்ளுவன்
தலைவர், உலக வள்ளுவ குல இளைஞர் பேரவை.

No comments:

Post a Comment